சவூதி அரேபியாவில் எண்ணெய் ஆலைகள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவில் இரண்டு பெரிய எண்ணெய் நிலையங்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்களை நடத்தினர். இதில் அரசுக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய நிலையமான சவுதி அராம்கோ நிலையமும் அடங்கும். இதனால் 50 சதவிகித எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை பாதித்துள்ளதோடு உலகளாவிய எண்ணெய் சந்தையையும் பாதித்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த எண்ணெய் வள நாடுகளின் ஏற்றுமதியில் 3ல் 1 பங்கு சவூதியிலிருந்துதான் நடைபெறுகிறது.
உலகிற்கு தேவையான 10 சதவிகித கச்சா எண்ணெய் சவூதியில் உற்பத்தியாகிறது.
சவூதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஞாயிற்றுக்கிழமை சந்தை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பிரெண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 60.15 அமெரிக்க டாலராக இருந்தது. அதன்பின்னர் 12 சதவீதம் உயர்ந்து, ஞாயிற்றுக்கிழமை 70.98 டாலராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் மிரட்டல் காரணமான மோடி அரசு ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவில் மோடி அரசின் தவறான பொருளாதாரக்கொள்கையால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.